செய்திகள்
சத்குருவுடன் சந்தானம் கலந்துரையாடல்

கோவில்களை விடுவிக்க மிஸ்டு கால் எதற்கு? -சத்குரு விளக்கம்

Published On 2021-03-13 15:23 GMT   |   Update On 2021-03-13 15:23 GMT
கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்கு கொடுக்கப்படும் மிஸ்டு கால்கள் மூலம் மக்களின் விருப்பத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.
சென்னை:

#கோவில்அடிமைநிறுத்து என்ற இயக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட நடிகர் சந்தானம் பங்கேற்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் கலந்துரையாடினார்.

அப்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் முன்வைத்தார்.

“லாக்டவுன் காலத்தில் வாடிகன் சிட்டியில் இருந்து வெங்கடாஜலதி கோவில் வரை அனைத்தையும் மூடிவிட்டார்கள். நாட்டில் போதும்டா சாமி என சொல்லும் அளவுக்கு பிரச்சினைகள் உள்ளன. இந்த சமயத்தில் கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் கையில் எடுக்கிறீர்கள். இதற்கு பதில் ஏழைகளுக்கு உணவும் கல்வியும் கொடுப்பது குறித்து பேசலாமே? ” என்று சந்தானம் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சத்குரு, “தமிழ் கலாச்சாரம் நேற்று பிறந்தது இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிலர் இதை 30 – 40 வருடங்களுக்கு முன்பு தான் உருவானது போல நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னர்கள் பக்தியில்  ஊறிய மனிதர்களாக இருந்தனர். இங்கு முதலில் கோவில்களை கட்டிய பின்னர் தான் ஊர், நகரங்களை கட்டமைத்தனர். 

கிரானைட் கற்களை வைத்து தமிழக கோவில்களில் கட்டப்பட்ட அளவிற்கு வேறெங்கும் கோவில்கள் கட்டப்படவில்லை. கிரேன் போன்ற எந்த இயந்திர வசதிகளும் இல்லாத காலத்தில் இவ்வளவு மகத்தான கோவில்களை கட்டி இருக்கிறார்கள். நாம் கற்களை நகர்த்த கிரேன் பயன்படுத்துகிறோம், வெறும் கரங்களினால் இவ்வளவு பிரமாண்ட கோவில்களை கட்டிய அவர்களே வணங்கத்தக்கவர்கள் தான். 

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகிலேயே மிக வளமான நாடாக நம் நாடு இருந்தது. ஐரோப்பா, பிரான்ஸ், போர்ச்சுகல் முதல் அனைத்து நாடுகளிலும் இருந்து இந்தியா நோக்கி வந்ததற்கு காரணம், இங்கு இருந்த வளம்தான்.

முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் ஒரு கலாச்சாரம் வெற்றிகரமாக இருக்க வேண்டுமென்றால், மக்கள் தெம்பாக இருக்க வேண்டும். ஒருவர் பக்தராக இருந்தால் அவர் எப்போதும் தெம்பாகவும், உற்சாகமாகவும் இருப்பார். 

இப்போது நாட்டில் கோவில்களை விட சாராய கடைகளை முக்கியமானதாக வைத்துள்ளீர்களே? இது தான் நம் கலாச்சாரத்திற்கும் மாநில முன்னேற்றத்திற்கும் வழியா?

இப்போது, நம் நாட்டில் 50 சதவீதம் பேர் 30 வயதிற்கு கீழ் உள்ளார்கள். இந்த தலைமுறையில் கலாச்சாரத்தை மேம்படுத்தவிட்டால் எப்போது மேம்படுத்த போகிறீர்கள்?

மக்களிடம் தெம்பையும் நம்பிக்கையையும் உருவாக்க கோவில்கள் வேண்டும். 1947-ல் நம் மாநிலத்தின் மக்கள் தொகை ஒன்றரை கோடி இருந்தது. இப்போது 7 கோடியை தாண்டிவிட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை புதிய கோவில்களை நீங்கள் கட்டியுள்ளீர்கள். நாம் புதிதாக கோவில்களை கட்டாவிட்டால் கூட பரவாயில்லை. ஏற்கனவே இருக்கும் கோவில்களை கூட ஒழுங்காக பராமரிக்க வேண்டாமா?” என்றார்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். 

கேள்வி: கோவில்களை அரசிடம் இருந்து எடுத்து பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள், யார் அந்த பக்தர்கள்? அப்படி செய்யும்போது அதில் வெளிப்படைத்தன்மை  இருக்குமா?

பதில்: நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் சட்டங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சிகளுக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஊடகங்களுக்கு என்று ஒரு சட்டம் இருக்கின்றது. ஒரு நாள் நீங்கள் தவறாக செய்தி போட்டால் அதற்காக உங்கள் ஊடகத்தையே மூடி விடலாமா? அதற்கான சட்ட வழிமுறைகள் இருக்கின்றது. 

அதேபோல் கோவில்களை நிர்வகிப்பதற்கும் முறையான சட்டதிட்டங்களுடன் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அதில் பல்வேறு தரப்பட்ட மக்களை இடம் பெற செய்ய வேண்டும். சாதி மதம் பார்க்காமல் இருக்கும் மக்களை அதில் இருக்குமாறு செய்ய வேண்டும். இந்த அமைப்பை கண்காணிக்க இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்யலாம். நாளையே கோவில்கள் முழுவதையும் ஒப்படைத்து விட முடியும் என்று நான் சொல்லவில்லை, இதற்கு 2 அல்லது 5 அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகலாம். நான் சொல்வது முதலில் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தை கட்சிகள் காட்ட வேண்டும்.

கேள்வி: கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்காக மிஸ்டு கால் கொடுக்க சொல்லி கேட்டு இருக்கிறீர்கள். இதனால் என்ன நடக்கும்?

பதில்: மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த மிஸ்டு கால். தமிழ்நாட்டில் 7 கோடி பேர் உள்ளனர். அதில் சில கோடி மக்கள் மிஸ்டு கால் கொடுத்தாலே அதை அரசியல் கட்சிகள் கவனிக்கும். அதற்கு தான் இந்த மிஸ்டு கால் பிரச்சாரம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News