செய்திகள்
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை- பட்டமளிப்பு விழாவில் மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-
இன்று பட்டம் பெறும் மாணவர்களில் 111 பேர் தங்கப் பதக்கம் பெற்றுள்னர். இவர்களில் 87 பேர் நமது மகள்கள். இது கிட்டத்தட்ட 80 சதவிகிதம் மற்றும் மிகப்பெரிய சாதனையாகும். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக மருத்துவ அறிவியலில் பெண்கள் நம் நாட்டை வழிநடத்துவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில முதல்வர் எடியூரப்பா, பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா மற்றும் உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இன்று மொத்தம் 33,629 மாணவ, மாணவிகள் டிகிரி மற்றும் டிப்ளமோ பட்டங்களை பெற்றுள்ளனர். பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர். அவர்கள் தலா 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.