செய்திகள்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.
இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது.
எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது.
இதனிடையே, வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் 6 மாதத்திற்கு பின் மசோதா மாற்றியமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.