வழிபாடு
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் சிவகாமி சமேத நடராஜமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

குத்தாலம்-கும்பகோணத்தில் நடராஜர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

Published On 2021-12-20 08:08 GMT   |   Update On 2021-12-20 08:08 GMT
கும்பகோணம் நாகேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் உள்ள சிவகாமி உடனுறை நடராஜ பெருமானுக்கு மார்கழி மாத திருவாதிரை தினத்தினையொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் தேகசவுந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக 8½ அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.

இக்கோவிலில் கடந்த 17-ம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் தொடங்கி நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசவுந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோட‌ஷ அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோட‌ஷ உபச்சாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.

இதேப்போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன உற்சவ விழா திருவீதி உலாவுடன் நடைபெற்றது.இதனையொட்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ,நாகேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் உள்ள சிவகாமி உடனுறை நடராஜ பெருமானுக்கு மார்கழி மாத திருவாதிரை தினத்தினையொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News