செய்திகள்
கொரோனா வைரஸ்

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளால் கொரோனா பரவவில்லை- சங்க நிர்வாகிகள் மறுப்பு

Published On 2020-10-12 01:36 GMT   |   Update On 2020-10-12 01:36 GMT
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளால் கொரோனா பரவவில்லை என்று சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை:

சென்னை கோயம்பேடு அனைத்து பழ வியாபாரிகள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.சீனிவாசன், பழக்கடை கே.ஜெயராமன், எம்.தியாகராஜன், த.மணிவண்ணன் உள்ளிட்டோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கோயம்பேடு உணவு தானிய அங்காடி மற்றும் காய்கறி சந்தை முறையே கடந்த மாதம் 18 மற்றும் 28-ந்தேதிகளில் திறக்கப்பட்டன. பூ, பழ சந்தைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும், சிறு வியாபாரிகளுக்கும் அனுமதி கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகிறது.

இந்தநிலையில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் மீண்டும் கொரோனா பரவுகிறது என்று உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 22 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 சதவீதம் பேருக்கு அதாவது 40 முதல் 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மார்க்கெட் வியாபாரிகள் அல்ல, மார்க்கெட்டுக்கு வந்து சென்ற வெளி வியாபாரிகள் என்பதே உண்மை. மார்க்கெட் வியாபாரிகளால் கொரோனா பரவவில்லை. தவறான தகவல்கள் மூலமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகும் அபாயம் நிலவுகிறது.

மாதவரம், திருமழிசையை விட கோயம்பேடு சந்தை மிக பாதுகாப்பாக இருக்கிறது. எனவே தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல் வியாபாரிகள்-தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி கோயம்பேடு சந்தையை முழுவதுமாக திறக்க அரசும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News