பாளையில் சமூக வலைதளத்தில் அவதூறு - 2 பேர் மீது வழக்கு
நெல்லை:
பாளை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் துரை என்ற சிதம்பரம். கோவில் பூசாரியான இவர் கடந்த 18-ந்தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த 2 பேர் சமூக வலைதளத்தில், பிரச்சினைகளை தூண்டும் விதமாக அவதூறு கருத்துக்களை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவிட்டனர்.
இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் கங்கை கொண்டான் இன்ஸ்பெக்டர் பெருமாள் கீழப்பாட்டம் மற்றும் வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு கருத்துக்களை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.