ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி கோவிலில் 6-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-01-04 06:03 GMT   |   Update On 2020-01-04 06:03 GMT
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி 6-ந்தேதி நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி 6-ந்தேதி அனைத்து பெருமாள் கோவில் களிலும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 6-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதில், பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்பார் கள் என்பதால், சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அறநிலையத்துறை, சென்னை மண்டல இணை கமிஷனர் ஹரிபிரியா கூறியதாவது:-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 6-ந்தேதி அதிகாலை 2.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணிவரை மூலவர் தரிசனம் நடைபெறும். காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறக்கப்படும்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரூ.500, ரூ.200 என கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்த வழியாக கோவிலுக்கு செல்வது குறித்த வரைபடம், 4 மாட வீதிகளில் வைக்கப்படும்.

பெருமாள் தரிசனத்தை அனைவரும் பார்க்கும் வகையில் வண்ண எல்.இ.டி. திரைகள் கோவில் வளாகங்களில் அமைக்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பெருமாளை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

அதன்படி, மாற்றுத் திறனாளிகள் காலை, 8 முதல், 10 மணி வரையிலும், முதியோர்கள் காலை, 10 முதல், 11 மணி வரையும், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், 11 மணி முதல் இரவு, 10 மணி வரையும் தெற்கு மாட வீதி வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கான பாதுகாப்பு பணியில், நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதற்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளது. கோவில் வளாகத்தில் தீயணைப்பு துறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். அவசர மருத்துவ உதவிக்காக 2 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது. சுகாதார பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டண சீட்டு, இன்று (சனிக்கிழமை) மதியம், 1 மணிக்கு, ஒரு நபருக்கு ஒரு சீட்டு வீதம் விற்பனை செய்யப்படும். சிறப்பு கட்டண சீட்டை பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை நகலை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

தெற்கு மாட வீதி மற்றும் தேரடி தெருவில், தன்னார்வ தொண்டர்கள் வாயிலாக, அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை, 2.30 மணி முதல் ரூ.500 கட்டண டிக்கெட், பேட்ஜ் உள்ளவர்கள், கோவிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர்கள். காலை, 6 மணி முதல் இரவு, 11 மணி வரை, பக்தர்கள் சிறப்பு கட்டண தரிசனம், 200 ரூபாயில் பின்புற வாசல் வழியாகவும், தர்ம தரிசனம் முன் கோபுர வாசல் வழியாகவும் செல்லலாம்.

காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, மேற்கு கோபுர வாசல் வழியாக, கட்டணமின்றி பரமபத வாசலை கடந்து, உற்சவரை திருவாய்மொழி மண்டபத்தில் வணங்கி, கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News