உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் ஆடு திருடிய 2 பேர் கைது
ஆறுமுகநேரி பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேயன்விளை பாஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுடலைமணி (வயது62). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருடைய ஆடுகளை வீட்டின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் காலையில் இவரது 12 ஆடுகளும் மேய்ச்சலுக்கு சென்றன. ஆனால் மாலையில் அவை திரும்பும் போது ஒரு ஆட்டுக் கிடாய் காணவில்லை.
உடனே சுடலைமணி பல இடங் களில் சென்று தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தனது ஆட்டை யாரோ திருடி சென்று விட்டதாக கருதிய அவர் நேற்று ஆறுமுகநேரி சந்தையில் மறைவாக இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது லட்சுமிபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 33), விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பத்ரலிங்கம் (42) ஆகிய இருவரும் சுடலை மணியின் ஆட்டை விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்.
உடனே உஷாரான சுடலை மணி தனது 2 மகன்களையும் அங்கு வரவழைத்தார். பின்னர் அவர்கள் தங்கள் ஆட்டை கொண்டு வந்த ராமச்சந்திரன், பத்திரலிங்கம் ஆகியோரை பிடித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பேயன்விளை பாஸ் நகரை சேர்ந்த செல்வம் (18) என்பவர்தான் ஆட்டை திருடி தங்களிடம் விற்க சொல்லி தந்ததாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரன், பத்திரலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மற்றொருவரான செல்வத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.