செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2020-09-18 09:32 GMT   |   Update On 2020-09-18 09:32 GMT
பல்லடம் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் மகேந்திரன் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களாக பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து சொந்தமாக சிறிய சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு கலைவாணி (30) என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனை நினைத்து அடிக்கடி மகேந்திரன் வேதனை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, கலைவாணி, அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகேந்திரன் திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது, வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் மகேந்திரன் தற்கொலை செய்து கொண்டதுதெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News