செய்திகள்
கோப்புப்படம்

பண்ருட்டியில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த 2 மாணவர்கள் இடைநீக்கம்

Published On 2019-11-09 03:57 GMT   |   Update On 2019-11-09 03:57 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த 2 மாணவர்களை 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போதை தலைக்கேறிய உடன் வகுப்பறையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். சத்தம்கேட்டு பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் அங்கு வந்தார். அந்த 2 மாணவர்களையும் கண்டித்தார். அப்போது அந்த மாணவர்கள் 2 பேரும் மதுகுடித்திருப்பதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் பூவராகவமூர்த்தி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து அந்த 2 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் 2 பேரையும் 7 நாட்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

Similar News