உள்ளூர் செய்திகள்
பலியான தொழிலாளியின் குடும்பத்தினரிடம் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர் வெங்கடேசன் விசாரணை நடத்திய காட்சி.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் - தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் பேட்டி

Published On 2021-12-02 10:29 GMT   |   Update On 2021-12-02 10:29 GMT
விஷவாயு தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் திருப்பூர் வந்தார்.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் கொத்துக்காடு தோட்டத்தில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி, சாய ஆலையில் உள்ள இரண்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த 6 பேர் சென்றனர்.

அதில் சுத்தம் செய்ய சென்ற வடிவேல் (32) மற்றும் அவரை காப்பாற்ற சென்ற நிறுவனத்தில் வேலை செய்யும் மேலாளர் தினேஷ்பாண்டி (32) மற்றும் சாய ஆலையின் பிட்டராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் (55) ஆகியோர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக சாய ஆலை உரிமையாளர் தனலட்சுமி (48) என்பவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து வீரபாண்டி போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆய்வு செய்து சாய ஆலைக்கு நோட்டீஸ் வழங்கினார். 

இந்த நிலையில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து விசாரணை நடத்த டெல்லியில் இருந்து தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் திருப்பூர் வந்தார். பின்னர் சம்பவம் நடந்த சாய ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 

பின்னர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் மேலும் அரசு உதவிகள் கிடைக்கப் பெற்றது குறித்து கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். இன்று சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த ஆலையில் ஆய்வு செய்துள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டேன். 

இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். முதற்கட்டமாக அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சம் போடப்பட்டுள்ளது. மேலும் சட்டப்படி ரூ.10 லட்சம் தர வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளேன். 

விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சாய ஆலைகள் அதிகம் காணப்படுகிறது. எனவே கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். 

சாய ஆலை உரிமையாளர்கள், மனிதர்களை பயன்படுத்தாமல் எந்திரங்களைக் கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

அதிகாரிகள் முறையாக ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய எந்திரங்களைப் பயன்படுத்தாமல் மனிதர்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீதும் அதனை கவனிக்கத் தவறும் அதிகாரிகள் மீதும் வரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
Tags:    

Similar News