செய்திகள்
பலியானவர்கள் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட காட்சி.

கேரளாவில் கிணற்றை தூர்வாரும்போது வி‌ஷவாயு தாக்கி 4 தொழிலாளிகள் பலி

Published On 2021-07-16 04:37 GMT   |   Update On 2021-07-16 04:37 GMT
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிணற்றை தூர்வாரும்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குந்தரா பெரும் புழா பகுதியில் ஒரு வீட்டில் சுமார் 100 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த கிணறு சேறு படிந்து காணப்பட்டதால் தூர்வார முடிவு செய்தனர்.

கொல்லம் பெருநாடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சோமராஜன் (வயது 56), மனோஜ் (34), சிவபிரகாஷ் (25), ராஜன் (35) ஆகியோர் கிணற்றை சுத்தம் செய்ய இறங்கினர்.

பின்னர் 4 பேரும் அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அவர்களை வி‌ஷ வாயு தாக்கியது. இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர்.

பின்னர் அவர்களின் சத்தம் கேட்டு கிணற்றின் அருகே நின்றவர்கள் பார்த்தபோது தொழிலாளர்கள் 4 பேரும் கிணற்றுக்குள் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதுகுறித்து கொல்லம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து தொழிலாளர்களை மீட்டு கொல்லம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிணற்றில் வி‌ஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News