ஆன்மிகம்
சபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் நாளை புறப்படுகிறது
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 14-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை புறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி தந்திரி கண்டரு ராஜீவரு தலைமையில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஊர்வலமாக புறப்படுகிறது. இதையொட்டி நாளை பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் சிறப்பு நடைபெறும். பின்னர் மதியம் 12 மணிக்கு திருவாபரணங்கள் அலங்கரிக்கப்பட்ட பேழையில் வைத்து தலைச்சுமையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்படும்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு திருவாபரண ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
திருவாபரணங்கள் 14-ந் தேதி மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் வந்து சேரும். அங்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து, 6.30 மணிக்கு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். அப்போது, பொன்னம்பலமேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை தீப ஒளியாக பக்தர்களுக்கு காட்சி தருவார்.
முன்னதாக அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்பு 8.14 மணிக்கு பிரசித்திப் பெற்ற மகர சங்கிரம பூஜை நடைபெறும். மகரவிளக்கின் முன்னோடியாக நாளை மாலையில் பிரசாத சுத்தி கிரியை, 13-ந் தேதி பிம்ப சுத்தி கிரியை நடைபெறும். 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை நடைபெறும். 19-ந் தேதி மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருசி சிறப்பு பூஜை சன்னிதானத்தில் நடைபெறும்.
20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை காலை 6.30 மணிக்கு அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அத்துடன் மண்டல மகர விளக்கு பூஜை திருவிழா நிறைவு பெறும்.