செய்திகள்
மரக்காணம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மரக்காணம் அருகே கணவர் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் குணசீலன். கூலிதொழிலாளி. இவரது மனைவி கெங்கா (வயது33). இவர்களுக்கு மனோஜ்குமார்(9), சதீஷ்(4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மனோஜ்குமார் 4-ம் வகுப்பும், சதீஷ் யூ.கே.ஜியும் படித்து வருகிறார்கள். நேற்று சதீசுக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவனை பள்ளிக்கூடம் அனுப்பவேண்டாம் என குணசீலன் மனைவி கெங்காவிடம் கூறினார். இதைதொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கெங்காவை அவர் திட்டியதாக தெரிகிறது.
குணசீலன் வேலைக்கு சென்று விட்டார். கணவர் திட்டியதால் கெங்கா மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மரக்காணம் போலீசில் கெங்காவின் தந்தை ஜோதி புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews