செய்திகள்
செம்பனார்கோவில் அருகே வாழைத்தார்களை திருடிய 2 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே வாழைத்தார்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது55). இவர் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் கீழையூர் கிராமத்தில் குத்தகைக்கு வாழைப்பயிர் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இவரது கொல்லையில் விற்பனைக்கு தயாராக இருந்த 5 வாழைத்தார்களை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜெயபால் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செம்பனார்கோவில் அருகே வடுகபுஞ்சை கன்னிகோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் (42), கிடாரங்கொண்டான் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) ஆகியோர் என்பதும், வாழைத்தார்களை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.