செய்திகள்
ராமதாஸ்

கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எந்த குறையும் கூற முடியாது- ராமதாஸ்

Published On 2021-03-29 06:52 GMT   |   Update On 2021-03-29 06:57 GMT
தமிழகத்தில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி. நாங்கள் 2 பேரும் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.

ஆற்காடு:

ஆற்காடு பா.ம.க. வேட்பாளர் இளவழகனை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் கலவையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.தேர்தல் அறிக்கை அள்ள அள்ள குறையாத அமுதசுரபி. அ.தி.மு.க.- பா.ம.க. தேர்தல் அறிக்கை என்பது அரசிதழில் வெளியானது போல, அனைத்தும் நிறைவேற்றப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கை அப்படி இல்லை. காப்பியடித்த தேர்தல் அறிக்கை, அது திவாலாகிவிடும்.

இந்த தேர்தலோடு தி.மு.க. அத்தியாயம் முடிவுக்கு வரும். தமிழகத்தில் இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி. நாங்கள் 2 பேரும் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நான் எனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பேச முடியாத நிலை. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை. இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளேன்.

கார் கண்ணாடியை கூட கீழே இறக்க முடியாத நிலை. கொரோனா காரணமாக சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருங்கள்.

பல போராட்டங்களுக்கு பிறகு வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்பட்டது. இதில், பா.ம.க.வின் பங்கு முக்கியமானது. எங்கள் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றினார். அதேபோல இன்னும் பல வளர்ச்சிகளை முதல்வர் செய்து கொடுப்பார். மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும். குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாஷிங்மிஷின் வழங்கப்படும்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரப்போவது உறுதியாகிவிட்டது.

மழைக்காலங்களில் பாலாற்றில் வீணாகும் தண்ணீரை சேமித்து வைக்க பாலாற்றில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.

ஆற்காட்டில் புறவழிச்சாலை கொண்டு வரப்படும். ஆற்காடு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்படும். இந்த தொகுதியில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் பெண்கள் பெரும் சக்தி வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் மதுவை ஒழிக்க தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை. காரணம் மது ஆலைகளை நடத்துவதே தி.மு.க.வினர் தான். மதுவினால், ஆண்டுக்கு 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் பழனிசாமி ஆட்சியில் எந்த குறையும் கூற முடியாது. சிறப்பான ஆட்சியை பழனிசாமி தந்துள்ளார். அவரது ஆட்சி தொடர வேண்டும் என்பதால் அ.தி.மு.க.உடன் கூட்டணி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News