ஆன்மிகம்
ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில்

தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்

Published On 2020-12-09 01:28 GMT   |   Update On 2020-12-09 01:28 GMT
பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில்.
இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்…

​கோவிலின் வரலாறு

இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் மரபுகளை பிரதிபலிக்கிறது.

கர்னூல் ஸ்ரீ யங்கதி உமா மகேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு எதிரில் உள்ள இந்த நந்தி சிலையின் அளவு தினமும் அதிகரித்து வருவதால், அதை சுற்றி உள்ள சில தூண்கள் அகற்றப்பட்டுள்ளன. நந்தியின் வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் இன்னும் பல தூண்களை அகற்ற வேண்டி இருக்கும் எனப்படுகிறது.

கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்கு முன் இருக்கும் பிரமாண்ட நந்தி சிலை முன்பு சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நந்தி சிலை ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குள் நந்தியின் அளவு ஒரு அங்குலம் வளர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நந்தி சிலை செய்யப்பட்ட கல் விரிவடையும் தன்மை கொண்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நந்தி சிலை முன் வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகையில், முன்பெல்லாம் இந்த நந்தியை வலம் வரக்கூடிய அளவு இடம் இருந்ததாகவும், தற்போது சிலையின் அளவு பெரிதானதால் வலம் வர இடம் இல்லாமல் போய் விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோவில் அகத்திய மாமுனியால் வெங்கடேஸ்வருக்கு கோவில் நிறுவ நினைத்தார். ஆனால் கட்டுமான நேரத்தில் பெருமாளின் சிலையின் கட்டைவிரல் உடைந்ததன் காரணமாக, கோவில் ஸ்தாபனம் நடுவிலேயே நிறுத்த வேண்டியிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த அகத்திய முனிவர் சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தார். அப்போது அவர் முன் தோன்றிய சிவ பெருமான், இந்த இடம் கைலாயத்தைப் போன்ற தோற்றம் கொண்டதால், இது பெருமாளுக்குரிய கோவில் அமைக்க உகந்த இடம் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து இங்கு சிவ பெருமானுக்கு அகஸ்தியர் கோவில் எழுப்பினார் என்கிறது புராணக் கதை.

முனிவர்கள் இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் தவம் மேற்கொண்டிருந்தனர். அப்போது முனிவர் ஒருவரை காகங்கள் தொந்தரவு செய்ததால், இனி இந்த இடத்தில் காகங்கள் நுழையக் கூடாது என சபித்தார் என்ற கதை கூறப்படுகிறது. காகம் சனி பகவானின் வாகனமாகும். காகம் நுழைய முனிவர் சாபத்தால் தடை ஏற்பட்டதால், இங்கு சனி பகவானும் நுழைய மாட்டார் என்கின்றனர்.

மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போன்று சிவ லிங்கம் இல்லாமல், சிவனும் - பார்வதியும் சேர்ந்த அர்த்தநரிஸ்வர வடிவத்தில் அமர்ந்து நிலையில் காட்சி தருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரே கல்லினால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையான முதல் கோவில் இதுவாக இருக்கலாம்.

மலைகள் சூழ அழகிய இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட இந்த கோவிலில் அழகிய புஷ்கர்னி அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து தண்ணீர் பாய்வது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த புஷ்கர்னியில் ஆண்டு முழுவதும் எப்போதும் தண்ணீர் வ்ந்து கொண்டிருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு இந்த புனித நீரில் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்த புஷ்கரணியில் குளிப்பதால் அனைத்து பாவங்களையும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
Tags:    

Similar News