ஆன்மிகம்

ஆனந்தம் வழங்கும் அழகிய பெருமாள் கோவில்

Published On 2019-06-25 05:44 GMT   |   Update On 2019-06-25 05:44 GMT
புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூரை அரசாண்ட நமனத்தொண்டைமான், குளத்தூரில் ஒரு அழகிய பெருமாள் கோவிலைக் கட்டினார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை அருகே உள்ள குளத்தூரை அரசாண்ட நமனத்தொண்டைமான், குளத்தூரில் ஒரு அழகிய பெருமாள் கோவிலைக் கட்டினார். அவர் ஆண்ட வருடம் 1685 முதல் 1750 வரை. அந்த ஆலயமே குளத்தூரில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் நெடிதுயர்ந்த திருமதில் சுவர்கள். முகப்பில் சிறிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிரகாரம். எதிரே கொடிமரம், பலி பீடம், வலதுபுறம் ஏகாதசி மண்டபம் உள்ளது. இடதுபுறம் திரும்பி நடந்தால் தெற்கு நோக்கியபடி நுழைவுவாசல் இருக்கிறது. அதனுள் நுழைந்ததும் கொலு மண்டபம் காணப்படுகிறது.

இதன் வட திசையில் அனுமன் சன்னிதியும், ஆழ்வார்கள் சன்னிதியும் உள்ளது. கீழ் திசையில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார்.

இங்குள்ள கல்யாண அனுமனுக்கு ரோஜா மாலை சூட்டி வேண்டிக் கொள்ளும் பெண்களுக்கு, விரைவாக திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். இந்த அனுமனுக்கு, அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

இந்த ஆலயத்தில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டப்படுகிறது. அன்று முதல் 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் பலநூறு பக்தர்கள் தரிசிக்க வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அத்துடன் அன்று மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் பிற ஹோமங்களும் ஏகாதசி மண்டபத்தில் வைத்து நடைபெறும்.

வடக்கு திருமதில் சுவரின் நடுவே ஒரு வாசல் உள்ளது. அது எப்போதும் பூட்டியே இருக்கும். ஏகாதசி திருவிழா அன்று இந்த வாசல், சொர்க்க வாசலாக திறக்கப்படும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த வாயில் வழியே வந்து அன்று பெருமாளையும், தேவியர்களையும் தரிசிப்பார்கள். சித்திரை முதல் நாள் இங்கு பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமாக உள்ளது. அந்த ஆண்டின் பலாபலன்களையும் பக்தர்கள் சூழ அமர்ந்திருக்க படிப்பார்கள்.

21.6.2013 அன்று இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஆனி மாதம் வரும் இந்த கும்பாபிஷேக நாள் வருஷாபிஷேக தினமாக இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாளுக்கும் தேவியர்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி வெள்ளியில் இங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆவணி மாதம் ஸ்ரீஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அப்போது அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படும்.

புரட்டாசி நவராத்திரியின் போது 10 நாட்களும் தாயாருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இறைவனுக்கு தோசை நைவேத்தியம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவது எங்குமில்லா புதுமையாக உள்ளது. இந்த பிரசாதத்தை பெற நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருக்கிறது.

கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு, ஆலயம் ஒளிமயமாக காட்சி தரும். ஆலயம் முன் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. மார்கழி 30 நாட்களும் தனுர் பூஜையும் சிறப்பாக நடந்தேறுகிறது. தை பொங்கல் அன்று தேங்காய் பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், செங்கரும்பு முதலியன மூலவருக்கு படைக்கப்படுவதுடன் அன்று பெருமாளுக்கும் தேவியருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ஆலயத்தில் தினசரி 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் அருளும் இத்தல வரதராஜப்பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் நாமும் ஒரு முறை தரிசிப்போமே.

அமைவிடம் :


புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். குளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ½ கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயத்தை அடையலாம்.

மல்லிகா சுந்தர்
Tags:    

Similar News