செய்திகள்
சாலை மறியல்

கோடப்பமந்து பகுதியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-10-30 09:02 GMT   |   Update On 2019-10-30 09:02 GMT
கோடப்பமந்து பகுதியில் அடிப்படை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊட்டி:

ஊட்டி நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கோடப்பமந்து பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெரும்பாலான நிலப்பரப்பில், மலை காய்கறி சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. இங்கு பொருத்தப்பட்டுள்ள, 10க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரிவதில்லை.

இதனால், இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சமீபகாலமாக, காய்கறி தோட்டங்களில் புகுந்து விடும் காட்டெருமைகள், அவ்வப்போது, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கோடப்பமந்து பிரதான சாலையில் இருந்து, குடியிருப்புக்குள் செல்லும் ஒத்தையடி பாதை மிகவும் சேதமடைந்துள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வந்தவர்கள் சிலர், காட்டெருமைகளின் அச்சத்தால், ஒத்தையடி பாதையில் வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.’தெரு விளக்குகளை எரிய செய்வதுடன், நடைபாதை உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோடப்பமந்து சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஊட்டிகோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News