செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-11 09:53 GMT   |   Update On 2021-09-11 09:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி:

கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலையில் ஒரு இடத்திலும், மாலையில் வேறு இடத்திலும் என 800-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது.

இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் அரசு மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயனடைய உள்ளார்கள். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News