செய்திகள்
டாஸ் சுண்டப்பட்ட காட்சி

சிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

Published On 2020-11-29 03:58 GMT   |   Update On 2020-11-29 03:58 GMT
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சிட்னி:

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சொதப்பியது. இதனால் ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்து மலைக்க வைத்து விட்டது. எனவே, இந்த போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

விராட் கோலி, சிட்னி மைதானத்தில் இதுவரை சாதித்ததில்லை. இங்கு 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே (சராசரி 11.40 ரன்) எடுத்துள்ளார். அந்த மோசமான அனுபவத்துக்கு முடிவுகட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

அதேசமயம் முதல் போட்டியில் கிடைத்த வெற்றியால் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகத்துடன் களமிறங்கி உள்ளனர்.
Tags:    

Similar News