செய்திகள்
தமிழக அரசு

போக்குவரத்து, மின்வாரியத்தில் பணியாற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-11-03 02:29 GMT   |   Update On 2020-11-03 02:29 GMT
போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால் தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

கொரோனா தொற்றின் தாக்கம் உலகெங்கிலும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களாலும் உணரப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தை குறைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டபடியான வாரியங்கள் உள்ளடங்கிய அனைத்து வணிக நிறுவனங்களின் செயல்பாடும் பாதித்துள்ளது.

குறிப்பாக, தொழிலாளர் முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் மற்றும் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் பொது போக்குவரத்து இயங்காததாலும், தொழிற்சாலைகள் முழு அளவில் செயல்படாததாலும் மேற்குறித்த நிறுவனங்களின் இயக்க வருமானம் மிகவும் குறைந்து விட்டது.

என்றாலும், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

லாபம் ஈட்டும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், போனஸ் வழங்க தேவையான ஒதுக்கக்கூடிய உபரி தொகை இருந்த போதிலும், மேற்கூறப்பட்ட சவால்களையே எதிர்கொண்டுள்ளன.

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 2019-20-ம் ஆண்டில், லாபம் ஈட்டியுள்ள அல்லது நஷ்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவார்கள். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News