பிளஸ்-1 மாணவி கற்பழித்து கொலை: தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண்
மதுரை:
மதுரை செல்லூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவி, உசிலம்பட்டி அருகே உள்ள ஏணாப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்காக தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். சம்பவத்தன்று பாட்டி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார்.
அவரை தேடியபோது ஊருக்கு ஒதுக்குப்புறம் கண்மாய் அருகே பாறையில் மாணவி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த பால்சாமி மகன் மாதவன் (வயது 24) என்பவனை கைது செய்தனர். மாணவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனியே அழைத்துச் சென்று பேசியதாகவும், அவர் உடன் படாததால் கொலை செய்ததாகவும் தெரிவித்தான்.
ஆனால் போலீசாருக்கு இதில் நம்பிக்கை ஏற்பட வில்லை. மேலும் கொலைக்கு வேறு சிலரும் உதவியிருக்கலாம் என கருதினர். இதனால் மாதவனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது சகோதரர் மது (24)வுடன் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.
இதையடுத்து தலைமறைவான மதுவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் உசிலம்பட்டி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தான். அவனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ராஜேஷ்குமார் உத்தர விட்டார். அதன்பிறகு மதுரை மத்திய சிறையில் மது அடைக்கப்பட்டான்.