செய்திகள்
கபில் சிபல்

காங்கிரஸ் கட்சி தனது சொந்த தலைவர்களை குறி வைக்கக்கூடாது: கபில்சிபல் அறிவுறுத்தல்

Published On 2020-08-28 03:52 GMT   |   Update On 2020-08-28 03:52 GMT
காங்கிரஸ் கட்சி பா.ஜனதா மீதுதான் துல்லிய தாக்குதல் நடத்த வேண்டும் எனவும், சொந்த தலைவர்களை குறி வைக்கக்கூடாது என்றும் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கூறியுள்ளார்.
புதுடெல்லி :

காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பான தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், கட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டும் என்றும் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சித்தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரம் கட்சியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்த கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், இந்த கடித விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில், சோனியா தனது பதவி விலகல் விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அவரே தலைவராக நீடிக்குமாறு காரிய கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க இந்த கடிதம் விவகாரம் கட்சிக்குள் பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது. எனவே கடிதம் எழுதியவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த கடிதத்தின் எதிரொலி ஆங்காங்கே வெளிப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜிதின் பிரசாதா மீது உள்ளூர் காங்கிரசார் பாய்ந்துள்ளனர். அவரது குடும்பத்தினர் சோனியா குடும்பத்தினருக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு லகிம்பூர் கேரி மாவட்ட காங்கிரசார் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இது கடிதம் எழுதிய தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கட்சிக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டர்களில் ஒருவருமான கபில்சிபல் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘துரதிர்‌‌ஷ்டவசமாக ஜிதின் பிரசாதா உத்தரபிரதேசத்தில் குறி வைக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தனது சொந்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது ஆற்றலை வீணாக்குவதற்கு பதிலாக, பா.ஜனதாவைதான் துல்லிய தாக்குதல்களால் குறி வைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

கபில்சிபலின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக, மற்றொரு மூத்த தலைவரும், சோனியாவுக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவருமான மணி‌‌ஷ் திவாரி, ‘தீர்க்கதரிசனம்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த இருவரின் கருத்தையும் ஜிதின் பிரசாதா தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். எனினும் இது தொடர்பாக அவர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

காங்கிரசின் 23 தலைவர்களின் கடித விவகாரம் கட்சியின் காரிய கமிட்டியில் விவாதித்து முடிக்கப்பட்டாலும், அதன் விளைவுகள் தொடர்ந்து எதிரொலித்து வருவது கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News