செய்திகள்
காணொளி உச்சி மாநாட்டில் பேசிய மோடி, ராஜபக்சே

இலங்கைக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது- காணொளி உச்சி மாநாட்டில் ராஜபக்சேவிடம் தெரிவித்த மோடி

Published On 2020-09-26 09:00 GMT   |   Update On 2020-09-26 09:00 GMT
இந்தியா-இலங்கை உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி:

இலங்கையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சே குடும்பத்தின் பொதுஜன பெரமுனா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. மகிந்த ராஜபக்சே 4-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இடையிலான இரு நாட்டு உச்சி மாநாடு இன்று காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது. மேலும் இலங்கையில் இந்தியா செய்துவரும் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:-

எனது அழைப்பை ஏற்று இந்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தங்களுக்கு (இலங்கை பிரதமர் ராஜபக்சே) நன்றி. மேலும், இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் தங்களின் கட்சி வெற்றி பெற்று, தாங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற எனது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் சாகர் கோட்பாட்டின் படி, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் நாங்கள் சிறப்பு முன்னுரிமை அளிக்கிறோம். 

இவ்வாறு அவர் பேசினார்.

எம்டி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் அதிக ஒத்துழைப்புக்கு வாய்ப்பு கிடைத்ததாக இலங்கை பிரதமர் ராஜபக்சே பேசினார்.
Tags:    

Similar News