செய்திகள்
லிவின்ராஜ்

மார்த்தாண்டம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-05-01 15:10 GMT   |   Update On 2021-05-01 15:10 GMT
மார்த்தாண்டம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பாலவிளையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரோஸ்மேரி. இவர்களுக்கு லிவின்ராஜ் (வயது 30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார்.

மகன் லிவின்ராஜ் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் தக்கலை போலீசார் லிவின்ராஜ் வீட்டுக்கு சென்று அவரை ஏதோ விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை மாலையில் விடுவித்தனர். அதன்பின்பு அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இரவில் சாப்பிட்டு விட்டு தனது அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் லிவின்ராஜை அவரது தாயார் எழுப்ப சென்ற போது, அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஏதோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தாயார் ரோஸ்மேரி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது மகனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News