செய்திகள்
கூலி உயர்வு பேச்சுவார்த்தை-விசைத்தறி தொழிலாளர்கள் வேண்டுகோள்
10 ஆண்டாக ஒப்பந்தக்கூலி உயர்வு கிடைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆக்கப்பட்டுள்ளோம் என விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லடம்
திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகள் பெரும்பாலும் கூலி அடிப்படையில் மட்டுமே இயங்கி வருகின்றன.3ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.2014-ம் ஆண்டுக்கு பின் கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. 2011-ம் ஆண்டு கூலியை மட்டுமே இதுநாள் வரை தொழிலாளர்கள் பெற்று வருகிறார்கள். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
10 ஆண்டாக ஒப்பந்தக் கூலி உயர்வு கிடைக்காததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆக்கப்பட்டுள்ளோம்.தற்போது வங்கியினர் ஜப்தி, ஏல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒப்பந்தக்கூலி உயர்வு பிரச்சினையே இந்த இக்கட்டான நிலைக்கு காரணம். கூலி உயர்வுக்காக கடந்த காலங்களில் பலமுறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.இருந்தும் அதில் தீர்வு எட்டப்படவில்லை. ஊரடங்கால் மிகவும் பாதித்துள்ளோம்.
தற்போதுள்ள சூழலில் கூலி உயர்வு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே தொழிலை பாதுகாக்க முடியும் என்ற நிலை உள்ளது.கூலி உயர்வு ஒப்பந்தத்தை அரசே அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதற்காக அமைச்சர் சாமிநாதனை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம்.கொரோனா முடிந்ததும் இதுதொடர்பாக பேசுவோம் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். விசைத்தறியாளரின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் முன்வர வேண்டும் என்றனர்.