செய்திகள்
நாஞ்சில் சம்பத்

தினகரன் கட்சி ஒரு கம்பெனி - அங்கு நாகபாம்புகள் தான் இருக்கும்: நாஞ்சில் சம்பத் தாக்கு

Published On 2019-09-12 05:08 GMT   |   Update On 2019-09-12 06:47 GMT
அமமுக என்பது கட்சி அல்ல தினகரன் தலைமையில் இயங்குகின்ற பெரிய கம்பெனி. அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும் நல்லவர்கள் குடியிருக்க முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
சென்னை:

ராயபுரத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவுநாளில் “பாரதி” காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுடைய ஆட்டோ மொபைல் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் விற்பனை 40 சதவீதம் சரிந்து விட்டது என்று வாக்குமூலம் தருகிறார்கள். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டார்கள்.

ஆனால் மத்திய நிதியமைச்சர் வாடகை கார்களில் பயணம் செய்ய தொடங்கிவிட்ட காரணத்தால் கார் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள் என்று ஒரு புதிய கதையை சொல்லியிருக்கிறார்.

கார் வைத்து பயன்படுத்த வேண்டுமானால் கார் வைத்திருப்பவர்கள் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு விலைவாசி நம்முடைய விலா எலும்புகளை குத்தி கிழிக்கின்றது.

இந்தியாவின் பன்முகத்தன்மை பாழ்பட்டுக் கிடக்கிறது. இதனை திசை திருப்புவதற்காக மத்தியிலும் மாநிலத்திலும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாடகத்தின் திரை விரைவில் மூடப்படும் அதற்கான அறிகுறிகளை மக்கள் உணர்ந்து மக்கள் இன்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.



அ.ம.மு.க. என்பது கட்சி அல்ல தினகரன் தலைமையில் இயங்குகின்ற பெரிய கம்பெனி.

அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும் நல்லவர்கள் குடியிருக்க முடியாது புகழேந்தி அ.ம.மு.க.வில் இருந்து வெளியே வர முடிவு எடுத்தால் அவருக்கு நல்லது அவர் எடுப்பார் என்று கருதுகிறேன்.

இனிமேல் எடப்பாடி முதல்வர் ஆகப்போவதில்லை ஆகவே மீதி உள்ள நாட்களில் அனைத்து நாட்டிற்கும் போயிட்டு வருவது நல்லது.

சொட்டு நீர் பாசனத்திற்கு உலகிலேயே தலைசிறந்த நாடு இஸ்ரேல் இதற்கு நேரடியாக சென்று தான் பார்க்க வேண்டுமா? எதற்கு இந்த வறட்டு சவால் வாய் வேதாந்தம் எத்தனை நாள் நீடிக்க முடியும். மத்திய அரசாங்கத்தின் தயவில் காலம் தள்ளக்கூடிய அரசு செய்கின்ற தப்பாட்டத்தை தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு நாட்டில் இருக்கக்கூடிய சாதனையை நம்ம நாட்டில் செய்வதற்கே அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற தேவையில்லாத ஒன்று தகவலை தெரிந்துகொண்டே செய்து வைக்கலாம் தகவல் தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்து இருக்கின்ற கால கட்டத்தில் அமைச்சர்கள் இதுபோன்ற நடப்பது தமிழ்நாட்டில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News