செய்திகள்
திருப்பூரில் இந்து அமைப்பு நிர்வாகியை கொல்ல முயன்ற 3பேர் கைது
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஸ்ரீகாந்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 44). இவர் இந்து முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவராக உள்ளார்.
நேற்றிரவு அவரது நிறுவனத்திற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஸ்ரீகாந்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஸ்ரீகாந்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை வெறியுடன் தாக்கிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஸ்ரீகாந்த் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தேடிவந்தனர் .
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சக்திவேல் (24), நாகராஜ் (22), முனியாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் ஸ்ரீகாந்தை எதற்காக கொலை செய்ய முயன்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.