தஞ்சை அருகே வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பலி
வல்லம்:
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியை சேர்ந்தவர் மகன் மணிகண்டன் (வயது 35). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு ஆச்சாம்பட்டியில் உள்ள ஒரு பண்ணையில் தரையில் படுத்து செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பி அறுந்து தரையில் படுத்திருந்த மணிகண்டணின் மார்பில் விழுந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் மயக்கம் அடைந்தார். உடனே சத்தம் கேட்டு பண்ணை அருகே இலை அறுப்பதற்காக வந்தவர்கள் மணிகண்டனை பார்த்து அதிர்ச்சி அடைந் தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 48) விவசாய கூலித் தொழிலாளி. இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு வேலைக்கு சென்று கரும்பு தோகையை உறிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்துக்கான எர்த் கம்பியில் கை வைத்து விட்டார். இதில் மின்சாரம் அவரை தாக்கியது. காயமடைந்த அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
பலியான முனியாண்டிக்கு நாகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.