லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்...

குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்...

Published On 2021-01-21 02:57 GMT   |   Update On 2021-01-21 02:57 GMT
அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும்.
மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள்.

சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியில் இருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்கு தேவையான வெப்பநிலைக்கு மாற்றி உடலுக்குள் அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

மூக்கு பார்ப்பதற்கு பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. இதன் ஆரம்பத்தில், முகத்தின் பல பகுதிகளில் இருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டால் சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்றும் சொல்வார்கள். மூக்கில் இருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.

குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்த கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கில் இருந்து ரத்தம் வடியலாம்.
Tags:    

Similar News