செய்திகள்
மணிஷ் சிசோடியா

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், மற்றொரு நெருக்கடி நிலை உருவாகும்: டெல்லி துணை முதல்வர்

Published On 2021-10-10 12:12 GMT   |   Update On 2021-10-10 12:12 GMT
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், டெல்லி துணை முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக நிலக்கரி அமைச்சம் விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘‘மின்தடை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை. பருவநிலை காரணமாக சில பகுதிகளுக்கு நிலக்கரி அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது. கனமழை இருந்தாலும் நிலக்கரி இந்தியா லிமிடெட், மின் துறைக்கு 225 மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்கியிருக்கிறது. நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி இந்த ஆண்டு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்குமம் அளவிற்கு நாட்டில் போதிய அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளது.



இந்த நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ‘‘நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஒருவேளை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படலாம். தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் செயல்படாத நிலை ஏற்படும். ஆனால், மத்திய அரசு இதை ஏற்க மறுத்து வருகிறது. நிலக்கரி விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நாட்டில் மற்றொரு நெருக்கடி உருவாகும்’’ என்றார்.
Tags:    

Similar News