மதுரையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்திய காரை கடத்த முயன்றவர் கைது
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு மது கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மது கடத்தலில் சிக்கிய சொகுசு கார் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து கடத்த முயன்றார்.
இதனை மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு முருகன் கவனித்து விட்டார். அவர் விரைந்து செயல்பட்டு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனை தொடர்ந்து அவர் திடீர்நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணையில், அவரது பெயர் அசோக்குமார் (வயது24) என்பதும், அண்ணாநகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவர் காரை கடத்த முயன்றாரா? அல்லது வேறு நோக்கத்துடன் போலீஸ் நிலையம் வந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.