செய்திகள்
தற்கொலை

ரெயில் முன்பாய்ந்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2019-11-30 10:09 GMT   |   Update On 2019-11-30 10:09 GMT
விடைத்தாளில் தந்தை கையெழுத்து போடாததால் ரெயில் முன்பாய்ந்து 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கணபதி இ.பி.காலனி, லெனின் நகரை சேர்ந்தவர் மூர்த்தீஸ்வரன். இவரது மகன் அபினேஷ்வர்(வயது 15). இவர் கணபதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றார். அங்கு சமூக அறிவியல் விடைத்தாள் திருத்தி கொடுத்துள்ளனர். அதில் அபினேஷ்வர் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தந்தையிடம் கையெழுத்து வாங்கி வர கூறியுள்ளனர்.

பள்ளி முடிந்ததும் அபினேஷ்வர் நேரடியாக டியூசனுக்கு சென்றார். இந்த நிலையில் இரவில் டியூசன் சென்ற மகனை அழைப்பதற்காக மூர்த்தீஸ்வரன் சென்றார்.

அப்போது அபினேஷ்வர் தனது தந்தையிடம் சமூக அறிவியல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அந்த பேப்பரில் உங்களிடம் கையெழுத்து வாங்கி வர சொன்னார்கள் என்றார். இதனால் அவரது தந்தை மூர்த்தீஸ்வரன் கையெழுத்து எல்லாம் போட முடியாது என்றார்.

இதனால் மனவேதனை அடைந்த அபினேஷ்வர் வடகோவை- பீளமேடு செல்லும் ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News