செய்திகள்
வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
திருப்பூர் நகர கூட்டுறவு வங்கியில் திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் குமரன் சாலையில் திருப்பூர் நகர கூட்டுறவு வங்கி உள்ளது.நேற்று மாலை பணி முடிந்த தும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். வங்கிக்குள் யாராவது அத்துமீறி நுழைந்தாலோ அல்லது திருட்டு முயற்சியில் ஈடுபட்டாலோ? எச்சரிக்கை விடுக்கும் வகையில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு வங்கி காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இன்று காலை 5-30 மணியளவில் அவர் வெளியே சென்றிருந்த போது திடீரென வங்கியின் எச்சரிக்கை அலாரம் ஒலிக்க தொடங்கியது. 5-45 மணியில் இருந்து 6-15 மணி வரை சுமார் அரை மணி அலாரம் ஒலித்தப்படி இருந்தது.
இதையறிந்த காவலாளி வங்கிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்த போது யாரும் இல்லை. உடனே இது குறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலாளர் மற்றும் ஊழியர்கள் வங்கிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வங்கியின் லாக்கர் உள்ளிட்ட இடங்களில் திருட்டு முயற்சிகள் ஏதும் நடந்துள்ளதா? என்று ஆய்வு செய்தனர். ஆனால் திருட்டு முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வங்கியின் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது தெரிய வந்தது. உடனே தொழில்நுட்ப நிபுணர்கள் அதனை சரி செய்தனர். வங்கியில் திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வங்கி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.