செய்திகள்
பயிற்சியில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

முதல் ஒருநாள் போட்டி: சென்னையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி

Published On 2019-12-13 08:17 GMT   |   Update On 2019-12-13 08:17 GMT
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

அடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (15-ந் தேதி) நடக்கிறது.

பகல் - இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் இந்த ஒரு நாள் போட்டியை காண ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

முதல் ஒரு நாள் போட் டிக்கான இரு அணி வீரர்களும் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து பஸ்களில் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் இருந்து பஸ்சில் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தனர். காலை 9 மணி முதல் 12 மணி வரை பயிற்சியில் ஈடுபட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சியை முடித்த பிறகு இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்காக மதியம் மைதானத்திற்கு வந்தனர். அவர்கள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டி கடைசியாக 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News