செய்திகள்
மத்திய அரசு

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுக்கு பரிந்துரை- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Published On 2021-09-22 18:51 GMT   |   Update On 2021-09-22 18:51 GMT
காப்பீடு வழங்குவது தொடர்பான காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதால், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி வக்கீல்கள் கவுரவ் பன்சல், ரீபக் கன்சல் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. அதைத் தொடர்ந்து, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரங்களுக்குள் வகுக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூன் 30-ந் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



அதில், ‘கொரோனாவால் இறந்தவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவால் இறந்தவர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த இழப்பீடு தொகையை மாநிலங்கள் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்கும். கொரோனா இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 30 நாட்களுக்கு இழப்பீடு தொகை, விண்ணப்பிக்கும் நபர்களின் நேரடி வங்கி கணக்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படும்.

இந்த இழப்பீடு தொகை முதல், 2-வது அலை கொரோனா பாதிப்புக்கு மட்டும் இல்லாமல் இனி வரும் கொரோனா பாதிப்புக்கும் பொருந்தும். காப்பீடு வழங்குவது தொடர்பான காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதால், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அந்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News