செய்திகள்

மேலூர் அருகே மணல் திருட்டு - 4 பேர் கைது

Published On 2019-02-13 09:55 GMT   |   Update On 2019-02-13 09:55 GMT
மேலூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள், வைகை ஆற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் மேலூர் அருகே தும்பைப்பட்டியை அடுத்துள்ள சலாக்கிபட்டி, வேடார்குளம் கண்மாயில் அடிக்கடி சட்ட விரோதமாக மணல் திருடி கடத்தப்படுவதாக போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

இதையடுத்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு மணல் திருட்டு கும்பலை பிடித்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டது மேலூர் சூரக்குண்டுவைச் சேர்ந்த கதிரேசன் (28), சிங்கம்புணரி பிரபாகரன் (31), மேலூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் (56),கரையான்பட்டி ரவிச்சந்திரன் (53) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News