செய்திகள்
இந்திய ரெயில்வே துறையில் புது விதிமுறைகள் அமலாக இருப்பதாக வைரலாகும் தகவல்
இந்திய ரெயில்வேயில் அதிக பிராந்திய மொழிகளில் டிக்கெட் வழங்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பயணிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே பத்து புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்து இருப்பதாகவும், இவை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள், ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் காகிதம் இல்லா டிக்கெட்கள், ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர பிராந்திய மொழிகளில் டிக்கெட் வழங்குவது என பல்வேறு விதிமுறைகள் வைரல் பதிவுகளில் இடம்பெற்று இருக்கின்றன.
இந்த விதிமுறைகள் உண்மை என நம்ப வைக்க சிலர் வலைதள பதிவு ஒன்றை வைரல் பதிவுகளில் இணைத்துள்ளனர். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட இணைய தேடல்களில் இதுபோன்ற விதிமுறைகள் எதுவும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த தகவல் 2015 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் வலம்வந்து கொண்டு இருக்கிறது. மத்திய ரெயில்வே சார்பில் இந்த தகவல் உண்மையில்லை என பலமுறை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.