மதுரையில் ஷேர் ஆட்டோவில் 19 பவுன் நகை கொள்ளை
மதுரை:
மதுரை ஐராவதநல்லூர் கணக்குப்பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி லதா (வயது 48). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.
அப்போது 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நகையை பாலீஸ் போட்டுத்தருவதாக லதாவிடம் கூறினர்.
அதனை நம்பி 4 பவுன் வளையல்களை பாலீஸ் போட லதா கொடுத்தார். உடனே அந்த வாலிபர்கள், தண்ணீர் கேட்டுள்ளனர். அதனை எடுக்க லதா வீட்டுக்குள் சென்ற நேரத்தில், வளையல்களுடன் பாலீஸ் போட வந்தவர்கள் மாயமாகி விட்டனர்.
இது குறித்து தெப்பக்குளம் போலீசில் லதா புகார் கொடுத்தார். போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.புதூர் கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பீர்ஜாதி பேகம் (வயது 65). இவர் கோரிப்பாளையத்தில் இருந்து புதூருக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அவரது கைப்பையில் இருந்த 19 பவுன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.
இது குறித்து கே.புதூர் போலீசில் பீர்ஜாதி பேகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.