செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரணத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை - சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2018-02-23 08:54 GMT   |   Update On 2018-02-23 08:54 GMT
சுனந்தா புஷ்கர் மரணத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த கோரிய சுப்ரமணிய சாமியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.



ஆனால், திடீரென சசிதரூருடன், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரணத்தில் சிறப்பு புலனாய்வு குழு அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி பா.ஜ.க. மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பொதுநல மனு (Public Interest Litigation) என்ற பெயரில் அரசியல் நல மனுவை (Political Interest Litigation) சுப்ரமணிய சாமி தாக்கல் செய்துள்ளதாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் சுப்ரமணிய சாமி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு டெல்லி போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News