ஆன்மிகம்
1,010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெரிய கோவிலின் எழில்மிகு தோற்றத்தை படத்தில் காணலாம்.

1,010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தஞ்சை பெரியகோவில்

Published On 2020-08-05 03:41 GMT   |   Update On 2020-08-05 03:41 GMT
1,010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தஞ்சை பெரிய கோவில் மாமல்லபுரத்தைப்போல் மின்னொளியில் ஜொலிக்க உள்ளது. அங்கு ராட்சத விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் :

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டு 1,010 ஆண்டுகள் ஆகியும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இந்த கோவில் இருந்து வருகிறது.

இந்த கோவிலில் மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் ஆகியவை உள்ளன. இது தவிர 216 அடி உயரமுள்ள விமான கோபுரமும் அமைந்து உள்ளன. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதிகளும் உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கோவில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இங்கு தினமும் நான்கு கால பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன. மேலும் நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடும் பக்தர்கள் இல்லாமல் நடந்து வருகிறது.

இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட அகழி, பெரியகோட்டைச்சுவர் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது தஞ்சை பெரியகோவில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் ராட்சத விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. அதேபோன்று தஞ்சை பெரியகோவிலும் விரைவில் மின்னொளியில் ஜொலிக்கப்போகின்றன. 
Tags:    

Similar News