செய்திகள்
கொலை

ஜோலார்பேட்டையில் காதல் தகராறில் பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை

Published On 2020-11-25 07:29 GMT   |   Update On 2020-11-25 07:29 GMT
ஜோலார்பேட்டையில் காதல் தகராறில் பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

ஜோலார்பேட்டை அருகே உள்ள திரியாலத்தை சேர்ந்தவர் ஆனந்த் பாபு (வயது35). திருப்பத்தூர் தாமலேரிபுத்தூரில் பைனான்ஸ் நடத்தி வந்தார்.

நேற்று இரவு 9 மணிக்கு பைனான்ஸ் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திரியாலம் ரோட்டில் உள்ள தலைவர் வட்டம் அருகே சென்ற போது கும்பல் ஒன்று அவர் மீது பைக்கில் வந்து மோதினர்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆனந்த் பாபுவை கும்பல் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

படுகாயம் அடைந்த ஆனந்த் பாபுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஜோலார்பேட்டை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆனந்த் பாபு அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியை மற்றொரு வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் பாபுக்கும் வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் வேறு ஏதாவது ‌முன்விரோதம் தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News