ஆன்மிகம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

Published On 2021-04-06 03:21 GMT   |   Update On 2021-04-06 03:21 GMT
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் நாளில் 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா..., கோவிந்தா...’ என்று பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்னர். தேரின் முன்பாக கோவில் யானைகள் சென்றன. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

விழாவில் மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ரூபி மனோகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
Tags:    

Similar News