செய்திகள்
நாகர்கோவில் அருகே கோழிப்பண்ணை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவில் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கோழிப்பண்ணை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மார்த்தாண்டம் அருகே இடைக்கோடு திருத்திகோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெபர்சன் (வயது 44). இவர் இடைக்கோடு பகுதியில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு சந்திரமேகலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோழிப்பண்ணை நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெபர்சன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கடன் கொடுத்த நபர் ஒருவர், பணத்தை திருப்பி கேட்க ஜெபர்சன் வீட்டுக்கு சென்றார். அப்போது, படுக்கை அறையில் ஜெபர்சன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சுடர் மாதவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெபர்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.