செய்திகள்

அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை - பிரதமர் மோடி

Published On 2019-04-20 06:59 GMT   |   Update On 2019-04-20 06:59 GMT
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். #PMModi #Incometax

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் அந்த வருமான வரி சோதனையை ஆளும் கட்சியுடன் முடிச்சு போடுகிறார்கள். இந்த வருமான வரிசோதனைகள் எல்லாம் சட்டப்படிதான் நடந்துள்ளது.

அரசியல் ரீதியாக பழி வாங்கும் வகையில் எந்த வருமான வரி சோதனையும் நடத்தப்படவில்லை. போபால் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பிரக்யா சிங் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்.

பயங்கரவாதத்தை மதத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைத்து பேசுபவர்களுக்கு அவரது தேர்தல் போட்டி நிச்சயம் பதில் அளிப்பதாக இருக்கும்.


வங்கிகளில் கடன் வாங்கிய தொழில் அதிபர்கள் விஜயமல்லையா, நிரவ்மோடி, மொகுல்சோக்சி போன்றவர்கள் தங்களது கடனை இந்த ஆட்சியில் திருப்பி கொடுத்தே தீர வேண்டிய நிலை உருவாகி இருப்பதை உணர்ந்தனர். அதனால்தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்.

அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்.

பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 2014-ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட இந்த தடவை கூடுதல் வெற்றி கிடைக்கும்.

பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் தனி பெரும்பான்மை கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.

இவ்வாறு மோடி கூறினார். #PMModi #Incometax

Tags:    

Similar News