செய்திகள்
மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த பஸ்

மின்கம்பி மீது உரசியதால் தீப்பற்றி எரிந்த பஸ் - பயணிகள் 6 பேர் உடல் கருகி பலி

Published On 2021-01-16 21:26 GMT   |   Update On 2021-01-16 21:26 GMT
தாழ்வாக கிடந்த மின்கம்பி மீது உரசியதால் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் பயணிகள் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் பர்மீர் மாவட்டத்தில் இருந்து ஆஜ்மீர் நோக்கி நேற்று இரவு ஒரு சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 பேர் பயணித்தனர்.

இரவு நேரத்தில் பாதை மாறியதால் பஸ் ஜோலார் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிக்குள் நுழைந்தது. மகேஷ்பூர் என்ற கிராமத்தில் சென்றபோது தாழ்வாக கிடந்த மின்கம்பி மீது பஸ் உரசியது.

இதனால், பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்சின் மேற்பரப்பில் தீ பற்றியதை கவனிக்காத டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்கியுள்ளார். இரவு நேரம் என்பதால் பஸ்சில் பயணம் செய்த அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். மளமளவென பரவிய தீ பஸ் முழுவதும் எரிந்தது.

தீ வேகமாக பரவியதை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனடியாக, பயணிகளையும் எச்சரித்துள்ளார். பஸ் தீப்பற்றி எரிவதை உணர்ந்த பயணிகள் உறக்கத்தில் இருந்த எழுந்து அலறியடித்து பஸ்சில் இருந்து ஓடினர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த பயணிகளில் 6 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சில் பற்றியை தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News