ஆண்டிப்பட்டி அருகே கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆண்டிப்பட்டி, வருஷநாடு, வெள்ளியணை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்ததால் மூல வைகை ஆறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
வருஷநாடு அருகே உள்ள காமராஜ புரத்தில் பெய்த கன மழை காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த கண்ணன், மாணியக்கா ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தது. இதே போல மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், தும்மக்குண்டு தண்டியங்குளத்தைச் சேர்ந்த முத்தையா, கோமாளி குடிசையைச் சேர்ந்த லெட்சுமி ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளி ஜெயக்குமார் வயது 49 என்பவரின் வீடு கனமழையால் இடிந்து சேதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மயிலாடும்பாறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலை தொடர்ந்து மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம அலுவலர் சசிகுமார், ஊராட்சி செயலர் ராமசாமி, தலையாரிகள் ஞானேஸ்வரன் பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் இடிந்த வீட்டை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து வீடு இடிந்து பாதிப்படைந்த ஜெயக்குமார் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அதிகாலையில் என்னுடைய வீடு கனமழையால் இடிந்து சேதம் ஏற்பட்டது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இதற்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட வருவாய் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.