உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சுசீந்திரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

Published On 2022-01-15 06:03 GMT   |   Update On 2022-01-15 06:03 GMT
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏசுதாஸ் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுசீந்திரம்:

சுசீந்திரம் அருகே அக்கறை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 51).

இவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரேமா ஸ்டெல்லா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி விட்டது. ஏசுதாஸ் மனைவி பிரேமா ஸ்டெல்லா, மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு வந்த ஏசுதாஸ், மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

இது குறித்து பிரேமா ஸ்டெல்லா தனது மகனிடம் கூறினார். உடனே அவர் தந்தை மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்றார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரேமா ஸ்டெல்லா, அவரது மகளுடன் உறவினர் வீட்டுக்குச்சென்று விட்டனர். வீட்டில் ஏசுதாஸ் மட்டும் தனியாக இருந்தார். இன்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர் அவரது மனைவி மற்றும் மகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஏசு தாஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர். பின்னர் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.ஏசுதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏசுதாஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏசுதாஸ் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News