செய்திகள்
இவோ மோரல்ஸ்

அரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ்

Published On 2019-11-12 10:26 GMT   |   Update On 2019-11-12 10:26 GMT
பொலிவியாவில் நடைபெறும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த பொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோவுக்கு சென்றார்.
சூக்ரே:

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி, அதிபர் இவோ மோரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.  

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் உறுதிப்படுத்தியதால் ராணுவ கிளர்ச்சியின் மூலம் பதவி மாற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதனால், ஜனநாயகத்தை பாதுகாத்து ராணுவ ஆட்சி ஏற்படாமல் இருக்க சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
 
இப்படி தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவியதால் அதிபர் இவோ மோரல்சை பதவியில் இருந்து விலகுமாறு ராணுவம் நிர்பந்தித்தது. வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இவா மோரல்சும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

அவரை கைது செய்வதற்கான உத்தரவுடன் போலீசார் தேடி வருவதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்க மெக்சிகோ நாடு முன்வந்தது. சர்வதேச சட்டத்தின்படி, இவோ மோரல்ஸ் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக வருவதை பொலிவியா வெளியுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும் என மெக்சிகோ கூறியிருந்தது. 

‘இந்த முடிவு உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல்ரீதியான தஞ்சம் அளிக்கும் எங்கள் நாட்டின் வழக்கமான நடைமுறையாகவே இதை கருத வேண்டும்’ என மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரி கூறியிருந்தார்.

மெக்சிகோவின் இந்த உதவியை ஏற்றுக்கொண்ட இவோ மோரல்ஸ், அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு அவர் பொலிவியாவில் இருந்து மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றார். 

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அரசியல் காரணங்களுக்காக பொலிவியாவை விட்டு வெளியேறுவது வேதனை அளிக்கிறது, ஆனால் மேலும் வலிமையுடன் விரைவில் திரும்பி வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார். 

மெக்சிகோ அரசு விமானத்தில் இவோ மோரல்ஸ் பயணம் செய்ததை மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரியும் உறுதி செய்தார்.
Tags:    

Similar News